இணக்கப்பாட்டின்றி முடிந்தது ஐதேமு பங்காளிகளின் கூட்டம்
புதிய கூட்டணியை அறிவிப்பது மற்றும் அதிபர் வேட்பாளரைத் தெரிவு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய, நேற்று நடந்த ஐதேமு பங்காளிக் கட்சிகளின் கூட்டம், முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான யாப்பு விடயத்தில் பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்தக் கூட்டணியை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றுக்காலை 9 மணியளவில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தினர்.
சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.
எனினும், இறுதியான முடிவு ஏதும் எடுக்கப்படாமலேயே கூட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஐதேக சார்பில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் , கபீர் காசிம் ஆகியோரும், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், ஐதேக உடனடியாக அதிபர் வேட்பாளர் குறித்த இறுதியான முடிவுக்கு வர வேண்டும் என பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.