இன்று பிற்பகல் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறார் மகிந்த
சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியில் நிறுத்தவுள்ள தமது வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதையடுத்து. பொதுஜன பெரமுனவின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அவர் அறிவிக்கவுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையே, அதிபர் வேட்பாளராக, மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய மாநாட்டில் கூட்டு எதிரணியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அதிபர் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச அறிவித்த பின்னர், கட்சித் தலைவர்கள் இன்று மாலை களனி ரஜமகா விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
நாளை மகிந்த ராஜபக்சவும், அதிபர் வேட்பாளராக பெயரிடவுள்ளவரும் இணைந்து அனுராதபுர ருவன்வெலிசெயவில் நடைபெறும் 1500 பிக்குகள் பங்கேற்கும் பிரித் ஓதும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.