மேலும்

அதிபர் வேட்பாளர்களை குறிவைக்கும் மைத்திரி – தொலைபேசியில் பேச்சு

வரும் அதிபர் தேர்தலில், பிரதான அரசியல் கூட்டணிகளால் போட்டியில் நிறுத்தப்படவுள்ளனர் என எதிர்பார்க்கப்படும் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருடன் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சுமார் 15 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதன்போது, தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளீர்களா என கரு ஜயசூரியவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வினவியுள்ளார்.

அதற்கு அவர்,  அதிபர் வேட்பாளராகக் களமிறங்கத் தயாராகவே இருப்பதாகவும், கட்சியின் உயர்பீடம்தான் இறுதி முடிவை எடுத்துப் அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், அதுவரைக்கும் தன்னால் உறுதியான பதிலை வழங்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியின் வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாக கூறப்படும் கோத்தபய ராஜபக்சவுடனும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறிலங்கா அதிபர் மனம் விட்டுக் கலந்துரையாடியுள்ளார்.

இதையடுத்து இருவரும் அடுத்த சில நாட்களில் நேரில் சந்தித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *