பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களில் குடிவரவு, சுங்க பணியகங்களை நிறுவ அனுமதி
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிராந்திய மட்டத்தில் வணிக விமானங்களை இயக்குவதற்கு, பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை ஆகிய மூன்று உள்நாட்டு விமான நிலையங்களையும் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைத்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதேவேளை, இந்த மூன்று விமான நிலையங்களும், பிராந்திய விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு, இந்த விமான நிலையங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுவும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறிலங்காவின் எல்லைக் கட்டுப்பாடுகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சுங்கத் திணைக்களம் என்பனவற்றினால் செயற்படுத்தப்படுகின்றன.
அதேவேளை, வெளிநாடுகளுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கான தரத்துடன் இந்த விமான நிலையங்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுக்குமாறும், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.