நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவை சிறிலங்கா அதிபர் இன்னமும் எடுக்கவில்லை
நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, சபாநாயகர் செயலகமும் கூட, நாடாளுமன்றத்தைக் கூட்டும் நாள் பற்றி இன்னமும் தமக்கு தகவல் ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் நாள் அல்லது 07 ஆம் நாள் கூட்டுமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரப்பட்ட போதிலும், இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் சபாநாயகரின் செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தை வரும் 5ஆம் நாள் கூட்டவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் தனக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக, மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகரை நாளை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்
சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன், நான்கு கட்சிகளின் தலைவர்கள் நாளை முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்களே நாளை சபாநாயகரைச் சந்திக்கவுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சபாநாயகர் கரு ஜெயசூரிய, கட்சித் தலைவர்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.