மேலும்

இந்தியப் பெருங்கடல் விவகாரம் – கொழும்பில் கூடும் இந்திய, அமெரிக்க சீன உயர் அதிகாரிகள்

கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு, கொழும்பில் எதிர்வரும் 11ஆம், 12ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் ஆதரவுடன், சிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முன்முயற்சியின் விளைவாக, அலரி மாளிகையில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் கடற்கரை நாடுகளுக்கும், இந்தியப் பெருங்கடலை பிரதானமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இடையில், பரஸ்பர மற்றும் கரிசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சின், எல்லை மற்றும் பெருங்கடல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம், யி ஷியான்லியாங் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முக்கிய உரையாற்றவுள்ளனர்.

பெருங்கடல் விவகாரங்களுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர், பீற்றர் தோம்சனும் இந்தக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *