மேலும்

சிறிலங்கா அதிபருக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு,  சீன அதிபர் ஷி ஜின்பிங்,  சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார்.

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இந்த தகவலை வெளியிட்டார்.

”மருத்துவமனைத் திட்ட தொடக்க நிகழ்வு குறித்த பேச்சுக்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எனது பணியகத்துக்கு வந்த சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் இந்த கொடை பற்றித் தெரியப்படுத்தினார்.

இந்தக் கொடையைப் பயன்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும்  சீனா கேட்டுக் கொண்டது.

இதன்படி, முழுக் கொடையையும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வீடுகளை அமைக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.

இதற்கான திட்ட அறிக்கை சீனாவிடம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மில்லியன் ரூபா செலவிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா 7.6 மில்லியன் டொலரை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள தருணத்தில் சீனாவின் இந்த கொடை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *