அமெரிக்க ஜெனரல் சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’?
அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.
சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், கடந்த 20ஆம் நாள், தமது கீச்சகப் பக்கத்தில், ஜெனரல் ரொபேர்ட் பிறவுணை சிறிலங்காவுக்கு வரவேற்கிறோம் என்று பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்காக ஜெனரல் பிறவுண் சிறிலங்காவுக்கு வருகை தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், அவரது சந்திப்புகள், நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.