அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு
உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்த உனா மக்கோலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் ஐ.நா கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்காவில் செயற்படும், ஐ.நா அமைப்புகளின் அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று நடந்த நிகழ்வில், உனா மக்கோலியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன வணக்கம் செலுத்தினர்.
இந்த நிலையில் உனா மக்கோலியில் இறுதி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மாலை 4 மணியளவில் பொறளை இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும்.