பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா
லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரிடம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல் பதிலளிக்கையில், “பிரித்தானியா இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்துப் பேசியிருந்தேன். சிறிலங்கா அரசாங்கம் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
பாதுகாப்பு ஆலோசகரை கலந்துரையாடலுக்காக, லண்டனில் இருந்து உடனடியாக கொழும்பு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், பிரித்தானிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா தகவல் தெரிவித்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.