கூட்டு அரசாங்கம் தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமரும் ஐதேக தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீரவும் நாடாளுமன்றத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
தேசிய அரசாங்கம் தொடர்பாக உடன்பாடு இன்னமும் நடைமுறையிலேயே உள்ளது. அதனைத் திருத்துவதற்கு எந்தத் தேவையுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் மகிந்த அமரவீர கூறினார்.
ஐதேக – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளதா என்று நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.
இதற்கு சபாநாயகர் இன்று பதிலளிப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இரண்டு கட்சிகளும் தாம் கூட்டு அரசில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளன.