தியத்தலாவவில் பேருந்தில் குண்டுவெடிப்பு – 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பேர் காயம்
தியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தினர் 7 பேரும், விமானப்படையினர் 5 பேரும், பொதுமக்கள் 5 பேரும் அடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள், மற்றொரு பேருந்தில் பண்டாரவளையில் இருந்து தெபரவெவ- தியத்தலாவ நோக்கி பயணம் செய்த போதே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பை அடுத்து பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது.
இது உயர்சக்தி வெடிபொருள் ஒன்றினால், நிகழ்ந்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
எனினும், இது தீவிரவாதச் செயல் அல்ல என்றும் , இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய சிறிலங்கா படையினர் தம்முடன் எடுத்து வந்த குண்டே வெடித்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.