மேலும்

விலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி

SLFPகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நண்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, அரசாங்கத்தில் சட்டரீதியாக பாரியதொரு மாற்றம் நிகழும் என்றும், ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமரை மாற்றுவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும், அதனை வெளிப்படுத்த முடியாது என்றும் கூறிய எஸ்.பி.திசநாயக்க, பிரதமரை மாற்றுவதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், ஏனைய கட்சிகளுக்குத் தாவப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்து அவரது கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் இணைந்திருக்குமாறு இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, அரசாங்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தமது கட்சியினருக்கும், ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியினருக்கும் உறுதிமொழிகளை அளித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *