இதொகா முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சர் பதவி
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு, ஆரம்ப தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், முத்து சிவலிங்கம் இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்று, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் பொதுஜன முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து நுவரெலியவில் உள்ள 11 சபைகளில் ஆட்சியை அமைக்கப் போவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்திருந்தார்.
எனினும், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர், அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.