பதவி விலகுகிறார் சாகல? – ரணிலுக்கு ஐதேக முழு ஆதரவு
கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது கட்சியின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன், கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்றும், அமைச்சர் பதவிகளிலும், மூலோபாயங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துவதெனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு அரசாங்கம் புதிய இலக்குகள், நோக்கங்களுடன் செயற்படும்.
அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, மாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, தமது அமைச்சர் பதவியை விட்டு விலக இந்தக் கூட்டத்தில் விருப்பம் வெளியிட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.