முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா
ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.
2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.
அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.
அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, எதிர்வரும் 22ஆம் நாள் கொழும்புக்கு அனுப்பி வைக்க அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது
கடும் பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அறிவித்தல் சாந்தரூபனுக்கு அவுஸ்ரேலியா எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.
சாந்தரூபன் தற்போது அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.