சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி நாட்டை விட்டு வெளியேறத் தடை
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை அடுத்தே, கொழும்பு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
லசந்த விக்கிரமதுங்க கொலை நடந்த காலகட்டத்தில், இவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 2008-09 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணைகளின் போதே, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.