தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில்,
”கடந்த சில வாரங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தேர்தல் தொடர்பான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்த போதிலும், கடந்த வாரம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இதுவரையில் தேர்தல் வன்முறைகள், மற்றும் விதிமீறல் தொடர்பான 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளில், ஐதேகவின் இரண்டு வேட்பாளர்களும். 3 ஆதரவாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பாளர்களும், இரண்டு ஆதரவாளர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு வேட்பாளரும், 3 ஆதரவாளர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும், சுயேட்சை வேட்பாளர்கள் நால்வரும், தேர்தல் வன்முறைகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலன்னறுவ மாவட்டத்திலேயே அதிகளவு தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மிக்க குறைந்தளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.