மேலும்

வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

ruthrakumaranதமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின்  மூலம் உணர்ந்தவர்களாகவே  மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு   நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளிட்டுள்ள  மாவீரர் நாள் செய்தி-

இன்று மாவீரர் நாள். நம் தேசத்தின் புதல்வர்களின் திருநாள்.

நமது தேசத்தினதும் மக்களதும் விடுதலைக்காய் களமாடி விதையாய் வீழ்ந்த எமது மண்ணின் வீரவித்துக்களை நினைந்துருகி, அனைத்துலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்தும் நாள்.

ஈகத்தின் இலக்கணமாக உலகப்பரப்பெங்கும் தம்மை அடையாளப் படுத்தியதன் மூலம் உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளை அவர்கள் மனதில் விதைத்த தமிழீழத் தேச வீரர்களின் பெருநாள்.

மாவீரர்கள் எமது தேசத்தின் பாதுகாப்புக் கவசமாக இருந்தார்கள். மக்களதும் மண்ணினதும் விடுதலை வேட்கையின் குறியீடுகளாக விளங்கினார்கள்.

தாம் படைக்க எண்ணிய புதிய சமுதாயத்தின் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டி, ஏற்றத்தாழ்வுகளற்ற, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றைத் தமிழர் தாயகப்பகுதியில் கட்டியெழுப்பும் தேசச்சிற்பிகளாகச் செயற்பட்டார்கள்.

மாவீரர்நாளும், மாவீரர் துயிலும் இல்லங்களும் சமத்துவத்தின் குறியீடாக விளங்குகின்றன. தாயக தேசத்தின் விடுதலைக்காய் உயிர் ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் சமமாக மதித்து அவர்களை எமது மக்கள் தத்தமது இதயக்கோவிலில் வைத்து வணங்கும் நாளாக மாவீரர் நாள் இருக்கிறது.

மூத்த போராளியென்றோ, புதிய போராளியென்றோ, ஆண், பெண் என்றோ, வயதில் மூத்தவர் இளையவரென்றோ வேறுபாடுகள் எதுவுமின்றி, சமூகத்தில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, தேசத்தின் விடுலைக்காய் வீழ்ந்த அனைத்து புதல்வர்களையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் நமது தேசம் போற்றும் நாளாக மாவீரர் நாள் இருக்கிறது.

இன்றைய மாவீரர் நாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களோடு இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் எமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது.

அன்பான மக்களே!

மாவீரர்கள் தமிழீழ மக்களுக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு தமிழர் தாயகப்பிரதேசங்களில் அமைக்கப்படுவதனைத் தமது அரசியல் இலக்காகக் கொண்டே தம் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.

தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் வாழ்வதற்கு ஏற்றதோர் அரசியல் ஏற்பாடாகத் தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின் மூலம் உணர்ந்தவர்களாகவே அவர்கள் களமாடினார்கள்.

நமது மாவீரர்கள் தேசிய வீரர்களாகவே இருந்தார்கள். தேசிய வெறியர்களாக அவர்கள் என்றும் இருந்ததில்லை. எமது மக்களின் விடுதலைக்காய் எமது தாயகப்பிரதேசங்களை மீட்டெடுப்பதற்காகவே அவர்கள் போராடினார்கள். ஏனைய தேசங்களை ஆக்கிரமிப்பதற்காக அவர்கள் என்றும் போராடியதில்லை. எமது மக்களை இன அழிப்பில் இருந்து பாதுகாக்கவே அவர்கள் போராடினார்கள்.  இனவழிப்புக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் மாவீரர்களின் போராட்டம் மிக முற்போக்கானது. உலக மக்களது விடுதலைக்கும் வழிகாட்டக் கூடியது.

மாவீரர்களின் நீண்ட போராட்டம் காரணமாக எமது தேசம் தனது சிறப்பை உணர்ந்து ஒரு வலுவுள்ள தேசமாக அணிதிரளத் தொடங்கியது. ஒரு சிறிய தேசமாக இருந்த போதும் உலகப்பரப்பெங்கும் தன்னை நோக்கிய கவனத்தை ஈர்த்துக் கொண்ட தேசமாக ஈழத் திருநாடு விளங்குவதற்கு மாவீரர்கள் காரணமாக இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் அனைத்துலகக் கவனத்தை ஈர்ப்பதற்கும் மாவீரர்களின் போராட்டமே வழிகோலியது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் மாவீரர்களின் ஈகம் நிறைந்த போராட்டமே காரணமாய் அமைந்தது.

1950களில் சிங்களம் ஆரம்பித்த தமிழின அழிப்புத் திட்டத்தை மாவீரர்களின் போராட்டம் நெருக்கடிக் குள்ளாக்கியிருந்தது. மாவீரர்களின் போராட்டம் முகிழ்த்தெழுந்திருக்காவிடின் சிங்களம் தனது தமிழினவழிப்புத் திட்டத்தில் இற்றைக்குக் கணிசமான தூரம் முன்னேறியிருக்கும். 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தின் பின்னர் திட்டமிட்ட வகையில் சிங்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டம் இதனை உய்த்துணர வைக்கிறது.

மாவீரர்களின் கனவை நனவாக்கும் இலக்குடனேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கொள்கையினை வகுத்துக் கொண்டது. 2010 ஆம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் உருவாக்கிய போது மாவீரர்களை மனதில் இருத்தியே அதனை உருவாக்கிக் கொண்டோம். அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான செயற்பாடுகளை அனைத்துலக அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. ஜனநாயகவழியில், அரசியல், இராஜதந்திர ரீதியிலான போராட்ட முன்னெடுப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனித்துவமான அணுகுமுறையாக உள்ளது.

அரசியல் இராஜதந்திர வழிமுறைகளென்பவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை. அரசியற் செயற்பாடுகளின் ஊடாக நாம் திரட்டிக்கொள்ளும் வலு நமக்கு இராஜதந்திர வழிமுறைக்குக் கூடுதல் வாய்ப்பைத் திரட்டித் தரும். நமது வலு அதிரிக்க அதிகரிக்க நாம் அனைத்துலக வலுச்சமன்பாட்டுக் கணக்கில் கணிப்பிடப்பட வேண்டியவர்களாக மாறுவோம்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்று, தமிழீழ நடைமுறையரசு அமைக்கப்பட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்த வலு தற்போது எம்மிடம் இல்லாதுவிடினும் மென்வலு அடிப்படையிலான வலிமையினைத் திரட்டிக் கொள்ளக்கூடிய வியூக முக்கியத்துவம் மிக்க மக்களாக நாம் விளங்குகிறோம். நமது தாயகப் பிரதேசமும் வியூக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது.

அனைத்துலக அரங்கில் அனைத்துலக நாடுகளால் எடுக்கப்படும் முடிவுகள் அவர்களின் நலன்களின் பாற்பட்டுத்தான் எடுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒழுங்கு தர்மத்தின் சக்கரத்தில் சுழல்வதில்லை, மாறாக நலன்கள் என்ற அச்சிலேயே சுற்றுகின்றது எனத் தேசியத் தலைவர் அவர்கள் முன்னொரு தடவை அழகாகக் குறிப்பிட்டிருந்தார். தேசியத் தலைவரது வார்த்தைகள் எவ்வளவு தீர்க்கதரிசனம் மிக்கவை என்பதனை நாம் இன்று தெளிவாக உணர முடிகிறது.

இலங்கைத்தீவில் கரிசனை கொண்டுள்ள பலமிக்க அனைத்துலக நாடுகள் ஒடுக்கப்பட்ட, இனவழிப்புக் குள்ளாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் பக்கம் தமது ஆதரவினை வெளிப்படுத்தும் நிலையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமது நலன்களை வென்றெடுக்கக்கூடிய அரசாங்கத்தை இலங்கைத்தீவில் அமைப்பதிலும், அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலுமே அனைத்துலக அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. அதற்கேற்ற வகையில் உள்நாட்டு நிலைமைகளைக் கையாள்வதே அரசுகளது அணுகுமுiறாக இருக்கிறது.

இச் சூழலில் அனைத்துலக அரசுகளைக் கையாள்வதில் இருவகையான போக்குகளை ஈழத் தமிழர் அரசியலில் நாம் காணமுடிகிறது. ஒரு போக்கு அனைத்துலக அரசுகளின் கடைக்கண்பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறது. அனைத்துலக நாடுகளின் நிலைப்பாடுகளை எவ்வித எதிர்ப்புமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு, எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று அது அவர்களிடம் கெஞ்சுகிறது. அனைத்துலக அரசுகளுக்குப் போதிய அழுத்தத்தை வியூக முக்கியத்துவம் மிக்க மக்கள் என்ற நிலையில் இருந்து இப் போக்கைப் பின்பற்றும் தலைவர்கள் கொடுப்பதில்லை.

இதனால் வாயளவில் இவர்களைப் புகழ்ந்து பேசும் நாடுகள் தத்தமது செயற்தளத்தில் இவர்களைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால் இப் போக்கைப் பின்பற்றும் தலைவர்களோ ‘அனைத்துலக அரசுகளுடன் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நல்ல முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும். அனைத்துலக அரசுகளைப் பகைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது’ என்ற வகையிலான ஆறுதல் வார்த்தைகளைத் தமக்குத்தாமே தெரிவிப்பதுடன் மக்களுக்கும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது போக்கு, தமது நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத அனைத்துலக நாடுகளை முற்றாக நிராகரித்து, தன்னைத்தானே அனைத்துலக அரங்கில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறது. தமிழ் மக்களின் நலன்களுக்கு மாறான அனைத்துலகநாடுகளின் செயற்பாடுகளை கடுமையாகக் கண்டிப்பதுடன் இவற்றை ‘அனைத்துலகச்சதி’ என்ற நோக்குநிலையில் இருந்து அணுகுகிறது. அனைத்துலக அரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவதில் பெரிய பயமெதுவுமில்லை என்ற கருத்தினை இப் போக்கினைக் கொண்டுள்ளோர் வைத்திருப்பதால் இப்போக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளில் போதிய ஆர்வமற்றும் இருக்கிறது.

இவ் இரண்டு போக்குகளும் தமிழ் மக்கள் அனைத்துலகச் சமூகத்தைக் கையாள்வதற்குப் பொருத்தமற்றவை என நாம் கருதுகின்றோம். இதனால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ் இரண்டு போக்குகளுக்கும் உட்படாத மூன்றாவது புதிய போக்கினைத் தனது அணுகுமுறையாகக் கொண்டிருத்தல் அவசியம் எனக் கருதி அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம்.

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் அனைத்துலக அரசியலினதும் புவிசார் அரசியலினதும் பலமிக்க அனைத்துலக அரசுகளின் பாத்திரத்தை நாம் நிராகரிக்கவில்லை. மாறாக அவற்றின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு அவற்றை எமக்குச் சாதகமாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்துச் சிந்திக்கிறோம். இதனால் அனைத்துலக அரசுகளை நாம் நிராகரிக்கவில்லை. இதேவேளை தமிழர் தலைவர்கள் எவரும் அனைத்துலக அரசுகளின் கைப்பாவையாக இயங்குவதையோ, தமிழீழ மக்களின் நலன்களுக்குப் பாதகமான அனைத்துலக அரசுகளின் முடிவுகளை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வதனையோ நாம் நிராகரிக்கிறோம்.

எமது இந்த அணுகுமுறையினை ஒரு செயற்பாட்டு உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 2015 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசின் பொறுப்பில் நிலைமாறுகாலகட்ட நீதிப்பொறிமுறையை ஒப்படைத்தமை இவ் அரசுகளின் நலன்களின் பாற்பட்ட, அதேவேளை தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானதொரு நடவடிக்கையாக அமைந்தது. இதனை தமிழ் அரசியற்தலைவர்களில் ஒரு தரப்பு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டது. மறு தரப்பு முழுமையாக நிராகரித்துக் கண்டனங்களை எழுப்பியது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இம் முடிவினை காரண காரியங்களுடன் கண்டித்ததுடன் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு MAP எனும் அனைத்துலக நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைத்து. இக் குழுவின் கண்காணிப்பு ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் அனைத்துலக அரங்கில் செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்துலக சமூகத்தினை எமது நோக்குநிலையில் இருந்து அணுகுவதற்கான அரங்கை அமைப்பதில் நாம் முன்னோக்கி நகர்ந்துள்ளோம். எம்மால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் அனைத்துலக நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதனையும் எம்மால் நன்கு உணர முடிகிறது.

அன்பானவர்களே!

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற்கனவாகியிருக்கிறது. இலங்கைத்தீவு ஒரு நாடு எனவும் அங்கு வாழ்வோர் அனைவரும் ஒரு மக்கள் எனவும் சிங்களப் பெரும்பான்மைக்குள் தமிழ், முஸ்லீம் மக்களைப் புதைத்துவிடச் சிங்களம் எடுத்துவரும் முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை. இருந்தும் இம் முயற்சிகளைச் சிங்களம் கைவிடுவதாகவில்லை. நாம் சிறுவர் கதைகளில் படித்த மீண்டும் மனந்தளராத விக்ரமன் போல சிங்களம் வெவ்வேறு உத்திகளுடன் இம் முயற்சியினை முன்னெடுத்தவாறே உள்ளது.

சிங்கள மேலாண்மையினைத் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும் திட்டத்தின் பின்னைய முயற்சியாக புதிய அரசியலமைப்பு ஆக்க முனைப்பு அமைந்திருக்கிறது. தமிழின அழிப்புக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்தும் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப் படுவதான தோற்றத்தை அனைத்துலக நாடுகளின் அனுசரணையுடன் சிங்களத் தலைவர்கள் ஏற்படுத்தினர். இதற்குத் சில தமிழ்த் தலைவர்களும் துணை போயினர்.

காலத்தைத் தமக்குச் சாதகமாக இழுத்தடிக்கும் வகையில் ஏற்பாடுகளையும் சிங்களத் தலைவர்கள் மேற்கொண்டனர். பெயர் குறிப்பிடாத ஒரு சமஸ்டி வருகிறது என்று தமிழ்த் தலைவர்களும் முரசறைந்து ஆரவாரம் செய்தனர். ஆனால், இதுவரை வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையோ அல்லது கிடைக்கும் ஏனைய தகவல்களோ சிங்கள பௌத்த மேலாண்மையினை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியல்யாப்பு அமையும் என்பதனைச் சுட்டுகின்றன. தமக்குத் தேவையானவளவு காலஅவகாசத்தை எடுத்த பின்னர் புதிய யாப்பு முயற்சியினை சிங்களத் தலைவர்கள் கைவிட்டு விடுவார்கள் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எது எவ்வாறக இருந்தாலும்;, தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வு நாம் ஒரு தேசம் என்ற தகைமை கொண்ட மக்கள் எனும் நிலை அங்கீகரிக்கப்பட்ட போது எட்டப்பட வேண்டும் என்றே நாம் கருதுகிறோம். தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துக் கொண்ட மக்கள் என்ற நிலை ஏற்றுக் கொள்ளப்பட்டு, இனவழிப்புக்குள்ளாகும்; நிலையில் பரிகாரநீதியினைக் கோரி நிற்கும் தேசம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வகையிலேயே அரசியற்தீர்வு முயற்சிகள் அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

இதன்பாற்பட்டு, தமிழீழ மக்களுக்கான அரசியற்தீர்வு என்பது ஈழத் தமிழரது தாயகப் பிரதேசங்களிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு தனித்துவமான பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, ஈழத் தமிழர் தேசத்தின் ஆணை பெறப்பட்டே முடிவு செய்யப்பட வேண்டும் என நாம் அறைகூவல் விடுகிறோம்.

தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலையினையோ, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்கள் என்ற நிலையினையோ ஏற்றுக் கொள்ளாத, முழு நாட்டுக்குமான ஒரு அரசியலமைப்புக் குறித்து நடாத்தப்படும் எந்தவொரு பொதுவாக்கெடுப்பையும் அரசியற்தீர்வு முயற்சியின் பகுதியாகத் தமிழ மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்பட வேண்டிய பொதுவாக்கெடுப்புக் குறித்து Yes to Referendum  என்ற செயற்திட்டம் குறித்து நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இச் செயற்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு மக்கள் இயக்கமாகத் தனது செயற்பாட்டை ஆரம்பிக்கிறது. இச் செயற்திட்டம் குறித்த விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத்தரப்படும்.

இதற்கிடையில் நாம் 2018 ஜனவரி மாதத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கலைக்கவுள்ளதாக எனது பெயரில் போலி அறிக்கையொன்றினை சிறிலங்கா அரசின் உளவுத்துறையுடன் இணைந்து இயங்குவதாகக் கருதப்படும் குழுவொன்றினர் வெளியிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இத்தகைய போலி அறிக்கைகள் நமது மக்களை எந்தவகையிலும் குழப்பத்துக்கு உள்ளாக்காது என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.

அன்பான மக்களே!

நாம் மாவீரர்களை நினைவுகூரும் இவ்வேளையில் அவர்களின் அரசியற்கனவுகளை எமது மனங்களில் இருத்திக் கொள்வது அவசியமானதாகும். நாம் மாவீரர்களை நினைவுகூர்வது என்பது எமது பண்பாட்டின்பாற்பட்ட ஒரு சடங்காக மட்டும் அமைந்து விடக்கூடாது.

நாம் மாவீரர்கள் நினைவாக ஏற்றும் ஒவ்வொரு தீபமும், அவர்களுக்காக அவர்களின் பாதங்களில் வைக்கும் ஒவ்வொரு மலரும் அவர்கள் காட்டிய பாதையில் முன்னோக்கி நகர்வதற்கான உறுதிப்பாட்டை எமக்கு வழங்க வேண்டும்.

தமது புதல்வர்களை, தாய் தந்தையரை, கணவன் மனைவியரை, உறவுகளை மாவீரர்களாக எமது தாயகப்பூமிக்குத் தானம் செய்த மாவீரர்களின் குடும்பங்கள் எமது தேசத்தின் மரியாதைக்குரியவர்கள். இவர்களில் பலரும் தமது உறவுகளின் ஈகம் வீண்போய்விடுமா என்ற வேதனையில் வாடுவதனையும் நாம் அறிவோம்.

சிங்களத்தின் ஆக்கிரமிப்பால் அசிங்கப்பட்டுப்போயிருக்கும் எமது தாயகப்பகுதிகளில் மாவீரர்நாள் நிகழ்வுகளில் மக்கள் உற்சாகமாகப் பங்கெடுக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் உற்சாகமும் மகிழ்வும் தரும் செய்தியாக அமைகிறது. இதேவேளை மாவீரர் கனவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு செயற்படும் அரசியலை மாவீரர்களை நினைவுகூரும் அரசியற் தவைர்களும் முன்னெடுக்க வேண்டும் என நாம் இன்றைய நாளில் வேண்டுதல் செய்கிறோம்.

எமது மாவீரர்களின் தியாகங்கள் என்றும் வீணாகிப்போய்விடாது என்ற நம்பிக்கையினை எமக்குள் நாமே ஆழமாக வரித்துக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட மக்கள்திரளுக்கு மாபெரும் சக்தி உண்டு. எமது செயற்பாடுகள் எமது மாவீரர்களுக்கும், சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கும் நீதியினைப் பெற்றுத் தரும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும்.

நாம் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு, மாவீரர்களின் கனவுகளையும் அவர்களது ஈகங்களையும் எமக்குள் உள்வாங்கி, மாவீரர் இலட்சியத்தை நனவாக்க அயராது உழைப்போம் என இன்றைய மாவீரர் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *