93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்புமனுக்கள் கோரப்படும்
சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை, இன்று வெளியிடுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிடும்.
இதையடுத்து. தெரிவத்தாட்சி அதிகாரிகள், வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சுப்பிழைகள் காரணமாக தேர்தல் நடத்த முடியாதுள்ள 40 சபைகள் தொடர்பாக திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டால், அவற்றுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பும் வெளியிடப்படும்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், டிசெம்பர் 13ஆம் நாள் வரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனுக்களைப் பெறும் கால எல்லை முடிந்த பின்னர், தேர்தல் நாள் அறிவிக்கப்படும்.