விஜேவீர கொலைக்கு பொறுப்பேற்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை – லால்காந்த
றோகண விஜேவீரவை தான் கொலை செய்யவில்லை என்று மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தன்னிடம் கூறியதாக, ஜேவிபியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் நிறுவகத் தலைவர் றோகண விஜேவீர நினைவுநாளை முன்னிட்டு விகாரமாதேவி பூங்காவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“முற்போக்கு இலங்கையர்கள் எவரும் நொவர்பர் 13ஆம் நாளை மறக்கமாட்டார்கள். எமது நிறுவகத் தலைவர் றோகண விஜேவீர அன்று தான் கொல்லப்பட்டார். அப்போதைய ஆட்சியாளர்களால், ஆயிரக்கணக்கானவர்கள் அப்போது கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கு அதிகமான ஜேவிபியினர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் இல்லாமல் அழித்தது தாங்களே என்று பலர் இப்போது உரிமை கொண்டாடுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச, தானே போருக்குத் தலைமை தாங்கியதாக கூறுகிறார். விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டியது தானே என்று கோத்தாபய ராஜபக்ச கூறுகிறார். தானே அதனைச் செய்ததாக சொல்கிறார் சரத் பொன்சேகா. வெற்றிக்கு உரிமை கோரி இன்னும் பலர் நூல்களை எழுதியுள்ளனர்.
1980களின் இறுதியில் ஆயிரக்கணக்கான ஜேவிபியினர் கொல்லப்பட்டனர். ஆனால் எவரும் அதற்குப் பொறுப்பேற்கவில்லை. ஏனென்றால் நாங்கள் முற்போக்கான இயக்கமாக முன்நோக்கிச் செல்கிறோம்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா போட்டியிட்டிருந்தார். எமது கட்சியின் பரப்புரைக்கு நான் அப்போது தலைமை தாங்கியிருந்தேன். பரப்புரையின் போது, ஜனக பெரேரா தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, என்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார்.
அதையடுத்து அவருடன் நடந்த சந்திப்பின் போது, தான் றோகண விஜேவீரவைக் கொலை செய்யவில்லை என்று கூறினார். அவரது கொலையில் தனக்குத் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.
விஜேவீரவை கைது செய்தது மட்டுமே தான் என்றும், அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாம் ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயத்தில் தனது பெயர் சம்பந்தப்பட்டுள்ளதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், கூறிய அவர், அந்தக் குற்றத்துக்குக் காரணமான தனது அரசியல் அல்லது இராணுவ தலைவர்களை காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.
அந்த துரதிஷ்டமான நாளில் எங்களுடன் போராட்டத்தில் இருந்த பலர் இங்கு இருக்கிறார்கள். நான் வெலிக்கடை சிறையின் வதைக்கூடத்தில் இருந்தேன். ரில்வின் சில்வா மகசின் சிறையில் இருந்தார். எமக்கு அரசாங்க நாளிதழ்கள் மாத்திரம் தரப்படும்.
அதில் அப்போது உபதிஸ்ஸ கமநாயக்க கைது செய்யப்பட்டதாக தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. அந்த நாளிதழ்களை வீசிய சிறை அதிகாரிகள், போராட்டம் முடிந்து விட்டது, எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் என்று எம்மிடம் கூறினார்.
1980களின் இறுதியில் நடந்த கொலைகள் கடத்தல்கள் பற்றியும் தான் பலர் பேசுகின்றனர். ஆனால், 1985இலேயே ஜேவிபி உறுப்பினர்களின் படுகொலைகள் ஆரம்பமாகி விட்டன. அனுராதபுரவில் எமது இரு தோழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
புறக்கோட்டையில் இந்திய – சிறிலங்கா உடன்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய எமது உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர். அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்கவும், தினேஸ் குணவர்த்தனவும் எம்முடன் இருந்தனர். ஜே.ஆர். அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது.
இன்று ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 1987இல் இந்திய – சிறிலங்கா உடன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து எப்போது விசாரணை நடத்தப்படும்?
முதலாளித்துவ அரசாங்கங்கள் எமு தலைவரையும், எல்லா மத்திய குழு உறுப்பினர்களையும் 60 ஆயிரம் உறுப்பினர்களையும் கொன்றழித்து விட்டன. அந்தக் கொலைகள் எமக்கு ஒரு தந்திரோபாய பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் நாம் இழந்து போகவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.