மேலும்

கொழும்பில் அனைத்துலக புலனாய்வு அதிகாரிகளின் கருத்தரங்கு

international-communityஅனைத்துலக காவல்துறையின்( இன்ரபோல்)  புலனாய்வு அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“சிறிலங்காவின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நா, அனைத்துலக காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதனை அங்கீகரித்துள்ளன.

சிறிலங்காவில் தீவிரவாதம், வகுப்புவாதம், ஐஎஸ், மற்றும் பிரிவினைவாதம் உள்ளிட்ட எந்தவொரு, அடிப்படைவாதமும் சிறிலங்காவில் இல்லை என்பதை, அனைத்துலக காவல்துறையும், அனைத்துலக அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அதனால் அவர்கள் பாதுகாப்புக் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு சிறிலங்காவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் அனைத்துலக காவல்துறையின் ஒழுங்கமைப்பில் பல முக்கியமான பாதுகாப்பு கருத்தரங்குகள் சிறிலங்காவில் நடத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல கருத்தரங்குகள் நடக்கவுள்ளன.

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மனித கடத்தலுக்கு எதிரான கருத்தரங்கு நேற்று ஆரம்பமானது.

இதுபோல, அனைத்துலக காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

அனைத்துலக அளவிலான மோசமான போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல், இணையக் குற்றங்கள் சிறிலங்காவில் அண்மைக்காலங்களில் பதிவாகவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *