நீர்க்காகம் போர்ப் பயிற்சி தொடங்கியது – 69 வெளிநாட்டு படையினரும் பங்கேற்பு
சிறிலங்கா இராணுவம் நடத்தும் ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ மின்னேரியாவில் உள்ள காலாட்படைப் பயிற்சி மையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில், சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 2675 படையினரும், வெளிநாடுகளைச் சேர்ந்த 69 அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ இற்கான, பயிற்சி நடவடிக்கை தலைமையகத்தில், நேற்று நடந்த அறிமுகப்படுத்தல் கூட்டத்தில், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான், கென்யா,ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த 69 அதிகாரிகள் இந்தப் பயிற்சியில், பங்கேற்பாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பங்கேற்கின்றனர்.
அதைவிட, சிறிலங்காவின் இயந்திர காலாட்படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவு என்பனவற்றைச் சேர்ந்த 2108 படையினரும், 370 கடற்படையினரும், 197 விமானப்படையினரும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கான நிறைவேற்றுப் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டுப் பயிற்சி செப்ரெம்பர் 24ஆம் நாள் திருகோணமலையில் நிறைவடையும்.