அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைப் பாதுகாத்தது கூட்டு அரசாங்கமே – சிறிலங்கா அதிபர்
ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றியது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழா நேற்று கொழும்பு கம்மல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,
“ 2015 ஜனவரியில், ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கூட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலகத்தின் தண்டனைத் தடைகளில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றியது.
இந்தக் கூட்டு, அனைத்துலக கரிசனைகளை தீர்க்கும் முதன்மை நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இந்தக் கூட்டு அரசாங்கம் அமைந்திராவிடின், அனைத்துலக சமூகம் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும்.
முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கான விளிம்பில் இருந்த போது, தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.
அனைத்துலக சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொள்வதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.