தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன், யாழ். பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
தனது பிள்ளையை இவர் பலவந்தமாக பிடித்துச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தார் என்று கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர், வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.