சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இரா.சம்பந்தன் “ நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய போருக்கு முக்கிய காரணம்.
எனவே, ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான, புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இரு பிரதான கட்சிகளும் இணைந்து, தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலம் வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம்.
இதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்” என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நல்லிணக்கம் போன்ற விவகாரங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.