அமெரிக்காவின் இரண்டு நிதிக் கொடைத் திட்டங்களுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
சிறிலங்காவின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதியுதவி வழங்கவுள்ளது.
ஆணைக்குழுவுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்க முன்வந்துள்ள, 235,000 டொலர் ( 35.25 மில்லியன் ரூபா) நிதியை ஏற்றுக் கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்தார்.
இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவுடன் சிறிலங்கா அரசாங்கம் புரிந்துணர்வு உடன்பாட்டின் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் பெருமளவு முறைப்பாடுகள் இருக்கும் நிலையில், அதனிடம் போதிய வளங்களும், ஆளணியும் இல்லாத நிலை காணப்படுகிறது. அமெரிக்காவின் நிதியுதவி மூலம், விசாரணைகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதும், ஆட்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதும், ஆணைக்குழுவை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டில் மாத்திரம் ஆணைக்குழுவுக்கு 3450 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிலங்காவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம், பல்வேறு திட்டங்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொள்வதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 7.4 மில்லியன் டொலர் கொடைகள் சிறிலங்காவுக்குக் கிடைக்கும்.
அமெரிக்காவுடன் இது தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்த பத்திரத்துக்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது.