சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் அமெரிக்காவில் தப்பியோட்டம்
வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க தலைமறைவாகியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.
கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த கடைசி மாதமே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு பதவியேற்ற பின்னர், பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளிலும் ஒருபோதும் நாடு திரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.
இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு இறுதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் நாடு திரும்பி இராணுவத்தில் பணியைத் தொடர வேண்டியிருந்தது.
எனினும், வொசிங்டனில் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த பின்னர், பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க நாடு திரும்பவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கருதப்படுகிறது.
பதவியில் இருந்த கடைசி நாள், தாம் நாடு திரும்பவுள்ளதாக பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க கூறியிருக்கிறார். அவரது தொலைபேசி இலக்கம் பயன்பாட்டில் இருக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தூதரக அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவில் உள்ள சகோதரியின் பாதுகாப்பில் பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க ஒளிந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
கஜபா ரெஜிமென்டைச் சேர்ந்த இவர், நாடு திரும்புவதை தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கக் கூடும் என்று சி்றிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
அவரை இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவராக சிறிலங்கா இராணுவம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, விடுமுறை எடுக்காமல், தப்பிச் சென்றுள்ள பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்கவைக் கைது செய்வதற்கு அனைத்துலக காவல்துறையின் உதவியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கோரியிருக்கிறது.