‘மாற்றுத் தலைமைக்கு இடமில்லை; ஒற்றுமையே பலம்’ – விக்னேஸ்வரன் அறிவிப்பு
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்னிங் அம்மையாரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம் என்றும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றுத்தலைமையை ஏற்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
“அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு இடமில்லை. தற்போதைய தலைமைத்துவத்தில் ஒற்றுமையாகச் செயற்படுவதே எமது பலம்.
நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எமது முரண்பாடுகள் குரோதங்களை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவிதமான பிரிவினைகளுக்கும் இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.