வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி
வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்லிபுரக்கோவில் பகுதியில் உள்ள 6ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
கன்ரர் வாகனம் ஒன்றின் மீதே சிறிலங்கா காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 24 வயதுடைய இளைஞன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்தை தாம் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிற்காமல் தப்பிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து வடமராட்சி கிழக்கு மற்றும் மந்திகைப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையினரின் வாகனம் ஒன்றின் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் மந்திகை மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.