புலம்பெயர் சமூகம் கிழக்கில் கூடுதல் கரிசனையை செலுத்தி வருகிறது- அரசியல் ஆய்வாளர் யதீந்திரா
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களுடன் போட்டிபோட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்டே எமது புலம்பெயர் சமூகம் கிழக்கு மாகாணத்தில் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அரசியல் ஆய்வாளரும் சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி புலம்பெயர் அமைப்பான ‘நம்பிக்கை ஒளி’ யின் நிதி அனுசரணையுடன் திருகோணமலையில் புதிதாக கட்டப்பட்ட மாங்காயூற்று பாலர் பாடசாலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“முக்கியமாக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை வலுப்படுத்தும் வகையில் புலம்பெயர் சமூகம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. நாங்களும் கிழக்கை நோக்கித் திரும்புமாறு அவர்களை வலியுறுத்தி வருகின்றோம்.
கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலும் குரல்லற்றவர்களாகவே இருக்கின்றனர். கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளியுலகின் பார்வையிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவருமே பேச முன்வராத நிலைமையும் காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
இன்றைய நிலையில் எமக்குள்ள ஒரேயொரு பலம் எமது புலம்பெயர் உறவுகள் மட்டுமே. அவர்களின் உதவியுடனேயே இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.