வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு
சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து , தனியாக பொது வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதற்கு, சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் ஒருமனதாக, தீர்மானித்ததுள்ளது.
நேற்று நடந்த சங்கத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்கத்தின் செயலாளர் மிஹிரி டி அல்விஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் குற்றவியல் நீதி செயல்முறையை விரைவுபடுத்தவும், சட்டமா அதிபரின் செயல்பாடுகளிலிருந்து தனியாக பொது வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவது குறித்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரம் மற்றும் செயல்திறன் மற்றும் அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்,
அதை மேம்படுத்துவதற்கான எந்தவொரு திட்டங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வரவேற்கத்தக்கவை.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வழக்குத்தொடுநர் செயல்பாடு மட்டுமல்ல, சட்டமா அதிபரின் சிவில் பிரிவால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் உட்பட மற்ற அனைத்து செயல்பாடுகளும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வழக்குத்தொடுநர் செயல்பாடுகளை மற்ற செயல்பாடுகளிலிருந்து பிரிப்பது அத்தகைய சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அடையும் என்பதை நியாயப்படுத்த எந்த அனுபவ அல்லது அறிவியல் அடிப்படையும் வெளியிடப்படவில்லை.
மாறாக, சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரிப்பது திணைக்களத்தின் சுதந்திரம் மற்றும் தொழில்முறை தரங்களை அரித்து, திறமையின்மைக்கு பங்களிக்கும்.
எனவே, அத்தகைய பிரிவு நியாயமற்றது, தன்னிச்சையானது, எந்த பகுத்தறிவு அடிப்படையோ அல்லது தகுதியோ இல்லாதது மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
