காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டமூலம் கைவிடப்பட்டது
காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனம் பற்றிய சட்டமூலம், மீதான நாடாளுமன்ற விவாதத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் மீது இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவிருந்தது.
எனினும், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். எனினும், இந்த முடிவுக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போடுமாறு கண்டியில் நேற்று நடந்த மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் சங்க சபாக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மகிந்த ராஜபக்சவும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.