அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சீன நிறுவனங்களுடன், கட்டமைப்பு உடன்பாட்டுக்கு செல்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாதத்தை அடுத்து, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருந்து வந்த சட்ட ரீதியான முட்டுக்கட்டை அகற்றப்பட்டுள்ளது.