அம்பாந்தோட்டை மீது கவனத்தைக் குவித்த அமெரிக்க உயர் அதிகாரி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் பில் ரொட், நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் பில் ரொட், நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட மங்கள சமரவீர ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து அம்பாந்தோட்டைக்குச் சென்றார்.
அங்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள், மற்றும் உள்ளூர் முகாமைத்துவத்தின் செயற்திறன் என்பன தொடர்பான விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அவர் பார்வையிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பகுதி பங்குகளை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி இதனைப் பார்வையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டைச் செய்து கொள்வதில் தொடர்ந்து இழுபறிகள் நீடித்து வருகின்றது.
அதேவேளை, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதலாவது உயர் அதிகாரி வில்லியம் ரொட் என்பது குறிப்பிடத்தக்கது.