மேலும்

அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா

ambulanceசிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.

இந்தியாவின் உதவியுடன் மேல் மற்றும் தென்மாகாணங்களில் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை சிறிலங்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு இந்தியா உதவும் என்று, ஹற்றன் நோர்வூட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் இத்காக 20 மில்லியன் டொலர் கொடையை இந்தியா வழங்கும் என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கான 225 நோயாளர் காவுவண்டிகள், மற்றும் இதனை இயக்குவதற்கான 1500 பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் இந்த கொடையில்  உள்ளடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்திய அரசின் உதவியுடன், 89 நோயாளர் காவு வண்டிகள் 570 பணியாளர்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இந்தியா 7.5 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சேவை மூலம் 20 ஆயிரம் அவசர நோயாளர்களைக் காவும் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *