மேலும்

சிறிலங்கா வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

modi-colombo (1)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு சிறப்பு விமானம் மூலம் சிறிலங்காவை வந்தடைந்தார். சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

இன்றும் நாளையும் கொழும்பில் நடக்கும் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில் அவர் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா புறப்படுவதற்கு முன்னர் இந்தியப் பிரதமர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,

“சிறிலங்காவில் இரண்டு நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளேன். இது இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளும் இரண்டாவது இருதரப்புப் பயணம். எமது உறுதியான உறவின் ஒரு அடையாளம்.

எனது பயணத்தின் போது, கொழும்பில் மே 12ஆம் நாள் அனைத்துலக வெசாக். நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளேன். முன்னணி பௌத்த மதத் தலைவர்கள், புலமையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.

இம்முறை கண்டி தலதா மாளிகையை தரிசிக்கவுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

modi-colombo (1)modi-colombo (2)modi-colombo (3)

அதேவேளை, கொழும்பு வந்த பின்னர் இந்தியப் பிரதமர் தனது கீச்சகப் பக்கத்தில் தமிழில் செய்தி ஒன்றை வெளியிட்டள்ளார். அதில் “கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்.” என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கங்காராமய விகாரைக்கு மோடி சென்று வழிபாடுகளில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *