கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்
பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
பிஎஸ்எஸ் சுல்பிகார் போர்க்கப்பல் எதிர்வரும் மே 7ஆம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கடல்சார் கண்காணிப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் இன்று பிஎஸ்எஸ் சுல்பிகார் என்ற மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு வந்துள்ளது.
இந்த இரண்டு பாகிஸ்தான் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும் இன்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.