ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் உறுதி
நான் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி-கெடம்பே மைதானத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாம் பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு சக்திகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும், நாட்டைப் பிளவு படுத்த முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
பௌத்தத்துக்கு சிறப்பிடம் வழங்கும் திட்டத்தில் இருந்து என்னை அகற்றுவதற்காக எதிர்ப்பாளர்கள் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்.
நாட்டின் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் எல்லா மக்களும் அமைதியாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளேன்.
முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய நாட்டின் ஒரு பகுதி வெளிநாட்டு சக்திகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
நாம் பதவிக்கு வந்த பின்னர் அந்த உடன்பாட்டை மீளத் திருத்தினோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மே நாள் கூட்டத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மகிந்த ராஜபக்சவின் சகோதரி நிருபமா ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.