இந்தியப் பிரதமரின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றுங்கள் – கூட்டு எதிரணி கோரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக்கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
காலிமுகத்திடலில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின் மே நாள் பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் கொழும்பு வரும் போது திருகோணமலை துறைமுகம் தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளவுள்ளார்.
கருப்புக் கொடிகளை ஏற்றி இந்தியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
அவர்கள் சிறிலங்காவை இந்தியாவுக்கு விற்க முனைகிறார்கள்.
பிரிவினைவாத அரசியலமைப்பை கொண்டு வர முயன்றால், கூட்டு எதிர்க்கட்சியினர் வீதியில் இறங்கி அலரி மாளிகையையும் அதிபர் மாளிகையையும் முற்றுகையிட வேண்டும்.
2020 வரை நாடாளுமன்றத் தேர்தலுக்காக காத்திருக்க முடியாது. முன்கூட்டியே தேர்தலை நடத்த மக்கள் போராட்டங்களை நடத்தி அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.