சிறிலங்கா – இந்தியா இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைககள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்துக்கும், கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாகவே இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு, முற்றிலும் பயணிகள் கப்பல் சேவைக்கான ஒரு நெறிமுறைகளை இறுதிப்படுத்தியுள்ளோம். எனினும், இதுபொருளாதார ரீதியாக சாத்தியமாக வேண்டுமாயின், பொருட்கள் சேவையையும் உள்ளடக்க வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் சூழ்நிலைகளைக் கவனததில் கொண்டு, இந்த கப்பல் சேவைக்குபு புத்துயிர் கொடுப்பதற்கு விரும்புகிறோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவை 1980களின் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து, 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், போதிய வருமானம் இன்மையால் இந்த பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.