சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் உதவி
சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும், சிறிலங்காவில் தீவிரவாத முறியடிப்பு ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான் இந்த உதவியை வழங்கவிருக்கிறது.
ஜப்பானின் பொது கொடை உதவித் திட்டத்தின் கீழ், இதற்காக, 327 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும்.
சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து அமைச்சு என்பன இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளன.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், தொடர்பாடல் கருவிகளும் உள்ளடங்கியுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.