சுவீடன் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் – ‘ஜெனிவா’வே இலக்கு?
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளையும், பொருளாதார வாய்ப்புகளையும் முன்னேற்றுவது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
அத்துடன், ஐ.நா மற்றும் அனைத்துலக அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த நாடுகளில் சுவீடனும் ஒன்றாகும்.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா விவகாரம் குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ள சூழலிலேயே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின், சுவீடனுக்கான இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.