கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்
ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
96 மாலுமிகளுடன் வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் அலெக்சே நெகோட்சேவ், கப்பல் அணியின் தளபதி கப்டன் மாக்சிம் அலாலிகின் ஆகியோர், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
வரும் 30ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள ரஷ்ய கடற்படைக் கப்பலில் உள்ள மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தில் ஓமான் மற்றும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்திருந்த நிலையிலேயே நேற்று ரஷ்ய போர்க்கப்பலும் கொழும்பு வந்து சேர்ந்தது.