இன்று கொழும்பில் பேச்சுக்களை நடத்துகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – நாளை யாழ். பயணம்
சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றுமாலை கொழும்பு வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கனேடிய வெளிவிவகார அமைச்சரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிவிவகாரச்செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோர் வரவேற்றனர்.
இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரை கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார். இதன்பின்னர், இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டான செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளனர்.
நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள, கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், கனேடிய நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.