இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் நிறைவு
இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நிபுணத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கும் உறவுகளை இரண்டு நாட்டு ஆயுதப்படைகளுக்கு இடையில் ஊக்குவிக்கவும், இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் இரண்டாவது கலந்துரையாடல் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல், ஆயுதப்படைகளுக்கு இடையில், நேரடியாகவும், பரஸ்பரம் நலன்களை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் பற்றிய தரவுகளை பரிமாறிக் கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில், சிறிலங்காவின் மூலோபாயக் கரிசனைகள், ஆசிய பசுபிக் பிராந்தியம் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வரும் சூழல், தேசிய பாதுகாப்புக்கும், பூகோள பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுடுத்து வரும், திவிரவாதம், அடிப்படைவாதம் என்பனவும் இந்த ஆண்டு கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக இருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் இந்தியக் குழுவுக்கு எயர்மார்ஷல் ஏ.எஸ்.பொன்ஸ்லே தலைமை தாங்கினார்.
அவருடன், எஸ்எல்.ஜோஷி, கப்டன் பிரகாஸ் கோபாலன், விங் கொமாண்டர் ஏ.ஏ.கெல்கர் ஆகியோரும் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
சிறிலங்கா குழுவுக்கு, கூட்டுப்படைகளின் தளபதி எயர்சீவ் மார்ஷல் கோலித குணதிலக தலைமை தாங்கினார்.
அவருடன், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், றியர் அட்மிரல் ரணசிங்க, எயர்வைஸ் மார்ஷல் குருசிங்க, ஓய்வுபெற்ற பிரதிகாவல்துறை மா அதிபர் மென்டிஸ், றியர் அட்மிரல் ஏ.எஸ்.விமலதுங்க, மற்றும் பாதுகாப்பு. வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் பங்கேற்றனர்.