சீபா, எட்கா உடன்பாடுகளால் ஆசியாவுக்கு நன்மை – சிறிலங்கா பிரதமர்
சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடும்(சீபா) , இந்தியா- சிறிலங்கா இடையில் கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் (எட்கா), தெற்காசியப் பிராந்தியத்துக்கு நன்மையளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நேற்று நடந்த தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்த உடன்பாடுகள், சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்தும். சிறிலங்கா அரசியல் உறுதிப்பாட்டை அடைந்துள்ளது. இது உறுதியான பொருளாதாரத்துக்கு அடித்தளமாக அமையும்.
அனைத்துலக வர்த்தக உடன்பாடுகளுக்குத் தடைகளாக இருக்கும், மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், வர்த்தக சூழல், கொள்கைகள் போன்றவற்றை விரைவில் சிறிலங்கா அகற்றும்.
கடல், வான், நெடுஞ்சாலைப் பயண வசதிகள், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இது ஆசியப் பிராந்தியத்துக்கும் சிறிலங்காவுக்கும் உதவியாக அமையும்.” என்றும் அவர் தெரிவித்தார்.