பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு
சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் இருந்து செயற்படும், பிரதி பாதுகாப்பு ஆலோசகரான, கொமாண்டர் லொயிக் பிசோட், சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கான வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
சிறிலங்கா வந்துள்ள அவர், நேற்று இராணுவத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அவருடன் கொழும்பிலுள்ள பிரெஞ்சு பிரதி தூதுவர் இசபெல் மிஸ்கொட்டும், இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டார்.
இருதரப்பு நலன்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா இராணுவத் தளபதியும், பிரேஞ்சு பாதுகாப்பு ஆலோசகரும், கலந்துரையாடினர்.
முன்னதாக, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதியையும், பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர், கொமாண்டர் லொயிக் பிசோட் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் ஜீன் மரின் சூவுடன் இணைந்து, கொமாண்டர் லொயிக் பிசோட் சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்திருந்தார்.
இதன்போது, இவர்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் அணிவகுப்பு மரியாதையையும் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.