முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்தக் கைதுகளால், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியிருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த ராம், நகுலன், பிரபா, கலையரசன் ஆகியோர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த மார்ச் மாத இறுதியில், சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் 23 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.