இந்திய பாதுகாப்பு அமைச்சர், தளபதிகளுடன் சிறிலங்கா கூட்டுப் படைத் தளபதி பேச்சு
நான்கு நாள் பயணமாக, இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் இந்திய விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று புதுடெல்லி சென்ற சிறிலங்கா கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, சவுத் புளொக் பணியகத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதையடுத்து, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹாவையும், கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் கே டோவனையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவும், சிறிலங்காவும், இந்தியப் பெருங்கடலில் நெருக்கமான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் பயிற்சி உள்ளிட்ட ஏனைய துறைகளிலும், இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.